இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணி ராணிதா ஞானராஜாவுக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் துணிச்சல் மிக்க பெண்மனிக்கான (IWOC) இவ்வாண்டின் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க முதற் பெண்மனி டொக்டர் ஜில் பைடன், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்தனி பிலிங்கன் ஆகியோரால் ராணிதா ஞானராஜாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைச் செயற்பாடுகளுக்காக ராணிதா ஞானராஜா வழங்கிய பங்களிப்பு, மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக வழங்கிய சேவைகள், இனரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள், சமய ரீதியான சிறுபான்மையினருக்கான சேவைகள் என்பனவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிச்சல் மிக்க பெண்ணுக்கான இந்த விருது 2007ம் ஆண்டு முதல் அமரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் சமாதானம், மனித உரிமைகள், மற்றும் மகளிர் மேம்பாடு என்பனவற்றில் துணிச்சலோடு தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தும் பெண்களை கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.