சீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் உய்குர் இன முஸ்லிம்களை இனரீதியாக அழித்தொழிக்க சீன அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் இனஒழிப்புக்கு எதிரான பிரகடனத்தின் ஒவ்வொரு சொல்லையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக கடைசியாக வெளியிடப்பட்டுள்ள சுயாதீன ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் அதிகமான உலக நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச சட்ட நிபுணர்கள், மனித உரிமை நிபுணர்கள், யுத்தக் குற்ற விசாரணையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவொன்று தயாரித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வாஷிங’டனில் உள்ள மூலோபாய மற்றும் கொள்கை வகுப்பு சிந்தனையாளர்கள் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவின் உய்குர் இன முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் இன ஒழிப்புக்கு எதிரான பிரகடனத்தை முற்றாக மீறும் வகையில் அமைந்துள்ளது. ஒரு அரசு என்ற ரீதியில் சீனா இதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலையில் உள்ளது என மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இடம்பெறும் இந்த மனித உரிமை மீறல்கள் பற்றி அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட முதலாவது சுதந்திரமானதும் சட்ட ரீதியானதுமான ஆய்வு இதுவேயாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சீனா ஏற்க வேண்டிய பொறுப்பு எத்தகையது என்பதும் இதில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி சுமார் 20 லட்சம் உய்குர் இன முஸ்லிம்களும் ஏனைய முஸ்லிம்களும் சீனாவின் மிக மோசமான தடுப்பு முகாம் வலையமைப்புக்குள் சிக்கித் தவித்து வருவதாக தெரிய வந்துள்ளது.