சந்தையில் புற்றுநோய் ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் இருப்பதாக தேவையற்ற பீதி பரப்பப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன கூறினார்.
எங்கு தவறு நடந்துள்ளதென விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புற்றுநோய் ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய எண்ணெய் இறக்குமதிக்கு இடமளித்த நபர்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
இது தொடர்பில் சட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொள்கலன்கள் சந்தைக்கு விடுவிக்கப்படவில்லையென சுங்க பணிப்பாளர் கூறியுள்ளார். இது தொடர்பில் கணக்காய்வு இடம்பெறுகிறது.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்,பாம் ஒயில் உட்பட அனைத்து பொருட்கள் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது.
தரச் சான்றிதழ் பெற்று அதற்கமைய பொருட்கள் இருந்தாலே அவை சந்தைக்கு விட அனுமதிக்கப்படுகிறது.
முதலாவது அறிக்கை கிடைத்தவுடன் மார்ச் 04 ஆம் திகதியே இவற்றை விடுவிக்காமல் தடுத்து வைக்க சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
புற்று நோய் ஏற்படுத்தும் இரசாயனம் இருப்பது உறுதியானதால் எண்ணெய் கொள்களன்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.தவறு எங்கு நடந்துள்ளது என சுங்க திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.
பாம் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பாவனையை ஊக்குவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாம் எண்ணெய் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய்க்கான வரி குறைக்கப்பட்டது. சுகாதாரம் தொடர்பான காரணங்களினால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சில வியாபாரிகளும் விசமிகளும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.
சுங்கத்திலிருந்து தேங்காய் எண்ணெய் வெளியில் சென்றுள்ளதா ? என்பது குறித்து விசாணை நடத்தப்படுகிறது.அவ்வாறு செல்லவில்லை என தகவல் கிடைத்துள்ளது.
உள்நாட்டில் அதிகளவு தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.தேவையற்ற பீதியடைய தேவையில்லை என்றார்.