அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வகுக்கும் கொரியா தொடர்பான கொள்கை தமது நாட்டை சீண்டும் வகையில் இருக்கக் கூடாது என வடகொரியா எச்சரித்துள்ளது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் செல்வாக்கு மிக்க சகோதரியான கிம் ஜோ யங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் தென்கொரிய தலைநகர் சியோலுக்கு நாளை விஜயம் செய்யவுள்ள நிலையில், அவரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இதனிடையே வடகொரியாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த பல வாரங்களாக முயற்சி செய்துவருவதாக அமெரிக்க அரசாங்கம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இருப்பதை இதுவரை வடகொரியா அங்கீகரிக்கவில்லை.
வடகொரியாவின் அணு மற்றும் பெலஸ்ரிக் ரக ஏவுகணைத் திட்டங்களால் அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளில் தொடர்ந்தும் முரண்பாடுகள் நீடிக்கின்றன.
கடல்வழியாக வடகொரியா மீது துப்பாக்கியின் வாசனையை பரப்ப அமெரிக்காவின் புதிய நிர்வாகம் முயற்சிப்பதாக கிம் ஜோ யங் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் நான்கு ஆண்டுகளையும் அமைதியாக கழிப்பதற்கு விரும்பினால், அதன் முதல்படியாக தமது நாட்டை சீண்டும் செயற்பாடுகளை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து முன்னெடுக்கும் இராணுவ பயிற்சிகளுக்கு தனது எதிர்ப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியானது தமது நாட்டின் மீதான படையெடுப்பிற்கான தயார்படுத்தலாகவே பார்ப்பதாகவும் கிம் ஜோ யங் குறிப்பிட்டுள்ளார்.
தென்கொரிய அரசாங்கம், யுத்தம் மற்றும் நெருக்கடிக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.