“ஜனாதிபதி தனக்கிருக்கும் அபரிமிதமான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய தருணம் இதோ வந்துள்ளது” | டாக்டர் உபுல் விஜயவர்தன

Date:

வேக வேகமாக காட்சிகள் மாறி வரும் இலங்கை அரசியல் களத்தை உன்னிப்பாக அவதானித்து வரும் ஆய்வாளர்களில் ஒருவரான உபுல் விஜயவர்தன ‘திஐலன்ட்’ ஆங்கில நாளிதழில் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் அரசியல் யாப்புக்கான 20 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கும் அபரிமிதமான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய தருணம் இப்பொழுது வந்துள்ளதாக குறிப்பிடுகின்றார். அரசாங்கம் குறித்த மக்களின் அதிருப்தி அலை வேகமாக பரவி வரும் இந்தச் சூழ்நிலையில், அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி முன்வராவிட்டால் அது பாரிய விளைவுகளை எடுத்து வர முடியும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
உடனடியாக நான்கு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து, அந்த அமைச்சுக்களுக்கு பொருத்தமான வேறு ஆட்களை நியமனம் செய்வதே இது தொடர்பாக ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கையாக இருந்து வர வேண்டுமெனக் கூறும் அவர், அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்கின்றார்.
1. சுகாதார அமைச்சர்
– பரீட்சிப்புக்கு உட்படுத்தப்படாத, லைசன்ஸ் பெறப்படாத மருத்துவ பானமொன்றை பகிரங்கமாக அருந்துவதன் மூலம் அவர் மிகவும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
– கொவிட் 19 சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான ஜெனிபர் பெரேரா கமிட்டியின் பரிந்துரையை உரிய நேரத்தில் அமுல் செய்யத் தவறியதன் காரணமாக நாடு சர்வதேச ரீதியில் ஒரு பாரிய பின்னடைவை சந்தித்தது. அந்தப் பரிந்துரைகள் டிசம்பர் மாதத்திலேயே சுகாதார அமைச்சரினால் அமுல் செய்யப்பட்டிருந்தால் ஜெனீவாவில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்கமாட்டாது. அதே போல, ஐ நா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பின் பெறுபேறுகளும் அநேகமாக வேறு விதமாக இருந்து வந்திருக்க முடியும்.
2. பொது பாதுகாப்பு அமைச்சர்
– பெண்களின் முகத்திரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து எந்த விதத்திலும் இலங்கைக்கு உதவவில்லை. ‘இந்த விடயத்தை மிகவும் தவறான ஒரு காலகட்டத்தில் பேசுகிறோம்’ என்பதனை அவர் அறியாதிருந்தது பெரும் துரதிர்ஷடமாகும். முகக் கவசங்கள் பயனுள்ளவை எனக் கருதப்படும் ஒரு பெருதொற்று கால கட்டத்தில் அவை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்திருந்தார்.
3. வர்த்தக அமைச்சர்
– எதிர்க்கட்சியில் இருந்த பொழுது, ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மீது கடுமையான விசமர்சனங்களை முன்வைப்பதில் நன்கு பிரசித்தமானவர். ஆனால், அதே அமைச்சரவை பதவி தனக்கு வழங்கப்பட்ட பொழுது முற்றிலும் செயற்திறனற்றவராகவே அவர் செயற்பட்டு வந்திருக்கிறார். அவருடைய செயற்பாடு காரணமாக அரசாங்க வர்த்தமானியும் கூட ஒரு கேலிக் கூத்தாகியுள்ளது. அவர் இந்தப் பதவியிலிருந்து ஒதுங்கி, பொருத்தமான ஒருவர் அதனை வகிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டிய சந்தர்ப்பம் இப்பொழுது வந்திருக்கின்றது.
– அரிசி மாபியாவை எதிர்கொள்ளக்கூடிய அமைச்சர் ஒருவர் தேவை. அநேகமாக முன்னைய ஜனாதிபதி சிறிசேனவுக்கு இந்தப் பதவியை வழங்க முடியும். அப்பொழுது அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வர்த்தமானி மேலானாதா அல்லது சகோதர பாசம் மேலானதா என்ற தீர்க்கமான ஒரு முடிவுக்கு அவர் வர வேண்டியிருக்கும்.
4. வெளி விவகார அமைச்சர்
– ராஜதந்திரத் துறையில் அரசாங்கம் கடும் தோல்விகளை சந்தித்துள்ளது. மிக முக்கியமான ராஜதந்திரப் பதவி ஒன்றான இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பதவி அநேகமாக ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப் பிரிவின் போது நிரப்பப்படாதிருந்து வருகின்றது. நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தியா இப்பொழுது ஒரு உலக வல்லரசு என்ற அந்தஸ்தை படிப்படியாக ஈட்டிக் கொண்டு வருகின்றது. ஆகவே, அந்த நாட்டில் விவகாரங்களை கையாள்வதற்கு உயர் ஸ்தானிகர் ஒருவர் இல்லாதிருப்பது வெட்கப்படக் கூடிய ஒரு விடயமாகும்.
– ஐ நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வெளி விவகார அமைச்சு கையாண்ட விதம் அதன் உச்ச மட்ட கையாலாகாத்தனத்தை எடுத்துக்காட்டியது. அந்த விவாதத்திலிருந்து அரசாங்கம் வெளியேறுவதாக அமைச்சர் தீர்மானித்த அதே வேளையில், ஜெனீவாவிலிருக்கும் இலங்கைத் தூதுவர் அதில் பங்கேற்றார். பிரேரணையில் தோல்வியடைந்த நாங்கள் வெற்றியீட்டியதாக உரிமை கோரினோம்! போதாக்குறைக்கு இந்தத் தீர்மானம் சட்டவிரோதமானது என வெளி விவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆகவே, அரசாங்கத்திற்கு எதிராக பெருகி வரும் மக்களின் எதிர்ப்பலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஜனாதிபதி இந்த நான்கு அமைச்சர்களையும் உடடியாக பதவி நீக்கம் செய்து, அந்த அமைச்சுக்களுக்கு பொருத்தமான வேறு ஆட்களை நியமனம் செய்ய வேண்டுமென டாக்டர் விஜயவர்தன தனது கட்டுரையில் ஆணித்தரமாக வாதிடுகின்றார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...