இந்தியாவில் கொரோணா தாக்கம் மிக மோசமான கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் அந்த நாட்டில் கொரோணாவின் உருமாற்றம் வீரியம், மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள், பரவல் வீச்சு, என்பன பற்றி ஆராய்வதற்காக அரசாங்கம் நியமித்த INSACOG இன்சா கொக் என்ற அமைப்பின் தலைவர் பிரபல கிருமியியல் நிபுணர் ஷஹீத் ஜமீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. இருந்தாலும் ராய்ட்டர் செய்தி சேவைக்கு அவர் அளித்துள்ள தகவலில் இதற்கான காரணத்தை கூற வேண்டுமென்று அவசியமோ அல்லது கடப்பாடோ எனக்கில்லை ஆனால் இந்த பதவியில் இருந்து நான் ஒதுங்கி கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
கொரோணா வைரஸின் தாக்கங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக INSACOG என்ற உயர்மட்ட விஞ்ஞானிகளை கொண்ட அமைப்பை இந்திய அரசாங்கம் ஏற்படுத்தியது. அதன் தலைவராக பணியாற்றியவர் தான் ஷஹீத் ஜமீல் கடந்த மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே இந்த அமைப்பு இந்தியாவில் கொரோனா நிலைமை மிக மோசமான கட்டத்துக்கு வரும் பொதுக்கூட்டங்களை தடுக்கவேண்டும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தது.
ஆனால் அந்த எச்சரிக்கைகள் எதையும் இந்திய அரசாங்கம் கவனத்தில் எடுக்கத் தவறியமையே இன்றைய நிலைமைக்கு மிக மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பதே இவரின் கருத்தாக இருக்கின்றது என்று சில தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கடந்த வாரம் இது தொடர்பான ஒரு கட்டுரையை இவர் எழுதியுள்ளார்.
அந்த கட்டுரையில் விஞ்ஞான ரீதியான சான்றுகளின் அடிப்படையிலான கொள்கை வகுப்புக்கு வரமுடியாமல் இந்திய விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பை எதிர்நோக்கி வருகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.