நாட்டில் மூன்று தசாப்தகால போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, இறுக்கமான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியும், பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் நடத்த, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்று (17) அனுமதியளித்தது.
எனினும் நேற்று இரவு முதல் முள்ளிவாய்க்கால் உள்ளடங்குகின்ற காவல்துறைப் பிரிவு உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 காவல்துறைப் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்படாது என்பதால், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால், 27 பேருக்கு எதிராக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த வழக்கின் மீது, நேற்றையதினம் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது, திருத்தப்பட்ட கட்டளையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்ததாக வழக்கு விசாரணையில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த, 10 பேருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தினால், முள்ளிவாய்கால் நினைவேந்தலுக்கு தடைகோரி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு 26 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.