ரஷ்யாவின் உற்பத்தியான SPUTNIC V COVID-19 தடுப்பூசி மருந்தின் முதலாவது தொகுதி இன்று காலை கொழும்பை வந்தடைந்துள்ளது. மருந்துப் பொருள்கள் விநியோக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த தடுப்பூசி மருந்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றார். முதலாவது தொகுதியாக 15 ஆயிரம் சொட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவிடமிருந்து 13 மில்லியன் சொட்டு SPUTNIC Vகொவிட்-19 தடுப்பூசி மருந்தினைப் பெற்றுக் கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளது. தேசிய மருந்துப் பொருள்கள் அதிகார சபை மார்ச் மாதம் நான்காம் திகதி இலங்கையில் அவசர தேவையின் நிமித்தம் ரஷ்ய தடுப்பு மருந்தைப் பாவிக்கலாம் என்ற அனுமதியை வழங்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 23ம் திகதி ரஷ்யாவில் இருந்து 70 லட்சம் சொட்டு மருந்தினைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. இதன் மொத்தப் பெறுமதி 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதன் படி ஒரு சொட்டின் பெறுமதி 9.95 அமெரிக்க டொலர்களாகும்.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேரம் பேசல் குழுவொன்று நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏப்பிரல் மாதம் ஐந்தாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரஷ்யாவிடமிருந்து மேலும் ஆறு மில்லியன் சொட்டு மருந்தினைப் பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.