கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேராத் தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பில் வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தடுப்பூசிக்கு பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சகம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை.
சில நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு நடைமுறைகளைத் தொடங்கியுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்ததாகவும், அது குறித்து அந்த நிறுவனங்கள் சுகாதார அமைச்சகத்திற்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி குறித்து உங்கள் பகுதிகளில் உள்ள சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோரை மட்டுமே நம்புமாறு மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, மக்கள் பிரதிநிதிகள் ஒழுங்கற்ற முறையில் செயல்படுவதையும் சுகாதார ஊழியர்களின் கடமைகளை சீர்குலைப்பதையும் கவனிப்பது வருந்தத்தக்கது என்றார்.
“இது ஒரு நல்ல முன்மாதிரி அல்ல”. சமூகத் தலைவர்கள் இந்த பணியில் சுகாதார ஊழியர்களுடன் தங்கள் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் ஒத்துழைக்க வேண்டும், ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.