18 கிலோ பச்சைக்கொழுந்து பறிக்க கோரி தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலே இன்று (30) காலை முதல் உண்ணாவிரதம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையினால் 1,000 ரூபாய் நாட்சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் கொட்டியாகலை தோட்ட நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 18 கிலோ கிராம் பச்சை தேயிலை பறிக்க வேண்டும் என கடந்த மூன்று மாத காலமாக அழுத்தம் கொடுத்து வருகின்றது.
கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 13 கிலோ பச்சை கொழுந்தே பறித்தோம் அதற்கு மேலதிகமாக பறிக்கும் பச்சைக் கொழுந்து ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வந்தது. எங்களது தொழிற்சங்கம் அறிவித்தமைக்கு அமைய மேலதிகமாக 02 கிலோவுடன் 15 கிலோ பச்சைக்கொழுந்து பறித்துக்கொடுக்க முடியும்.
18 கிலோ பச்சைக்கொழுந்து பறித்துக்கொடுக்க முடியாதென தெரிவித்தே உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க கட்டாயம் 18 கிலோ பச்சைக்கொழுந்து பறிப்பது அவசியம்.
இல்லை என்றால் தேயிலை தொழிற்துறை வீழ்சியடையும் நிலை ஏற்படும். 18 கிலோ கொழுந்து பறிக்க விட்டால் கிலோ ஒன்றுக்கு 40. ரூபாய் என்ற அடிப்படையிலே கொடுக்க முடியும் என தெரிவித்தனர்.