எண்ணெய் விலையை குறைக்கவும்.விவசாயிகளுக்கு உரங்களை வழங்கவும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை.
ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று கூறப்படுவதோடு, அதிகரித்த எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்கவும், தன்னிச்சையாக முடிவு எடுக்கபட்ட உரங்கள் மீதான தடையை வாபஸ் பெறவும் அவர் முதலில் தயங்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைகத்தில் வைத்து தெரிவித்தார்.
அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிராக தனது கட்சி மக்களுடன் போராடியது என்றும் அது தொடர்ச்சியான ஓர் போராட்டம் என்றும் அவர் கூறினார்.
இன்றைய விஷேட உரையில் அவர் வெளியிட்ட ஆறு அம்சக் கோரிக்கை பின்வருமாறு;
•ஏலவே இருந்த விலைக்கு எரிபொருள் விலையை குறைத்தல்.
•உரங்களின் பயன்பாட்டை மாற்றுவதற்கான முறையான திட்டத்தை வகுத்தலும், வரவிருக்கும் நெல் பருவங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக உரங்களை வழங்க வேண்டும்.
•எக்ஸ்பிரஸ் போர்ல் கப்பல் விபத்தால் மீன்பிடி சமூகத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஒரு நிலையான நிவாரண திட்டம் ஒன்றை வகுத்தலும்,எக்ஸ்பிரஸ் போர்ல் தீவிபத்தால் ஏற்ப்பட்ட சூழல் கட்டமைப்பை மீளப் பாதுகாத்தல்
•இணையவழி கல்விக்கான வசதிகள் இல்லாததால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குதல்.
•கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது (தடுப்பூசியை விரைவுபடுத்துதல்,சுகாதாரத் துறைகளுக்கு தோவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், மருத்துவமனை வசதிகளை அதிகரித்தல், பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்)
•பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மக்களுக்கு நிதி ரீதியாக நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தல் போன்ற விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது மேற்கூறிய மக்கள் பிரச்சிணைகளுக்கு தீர்வு வழங்குவார் என அவர் எதிர்பார்ப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்தார்.