ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து குரல்கொடுத்து உண்மையினை கண்டறியவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 28 மாதங்களை கடந்துள்ள நிலையில் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ள மக்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுப்பதற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிவேண்டி இன்றைய தினம்(21) கறுப்புக்கொடிகளை கட்டுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது அலுவலகத்திற்கு முன்பாக கறுப்புக்கொடியை ஏற்றிவைத்தார்.
ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்ததுடன் படுகாயங்களும் அடைந்திருந்தனர். இந்த நிலையில் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு ஒன்றை கடிதத்தை அனுப்பியிருந்தது.
அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்றுமாறு பேராயர் மல்கம் ஆண்டகை வேண்டுகோள்விடுத்திருந்தார்.
அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தனது அலுலகத்திற்கு முன்பாக இன்று காலை கறுப்புக்கொடியை ஏற்றி தனது ஆதரவினை வழங்கியுள்ளார்.
அனைத்து இன,மத மக்களும் இணைந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான உண்மையினை கண்டுபிடிக்க அழுத்தங்களை வழங்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்திருந்தார்.