ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நேற்றிரவு(27) இரண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.
இச் சம்பவங்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாவது வெடிப்பு சம்பவம் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள விடுதியொன்றுக்கு வெளியில் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாவது வெடிப்பு சம்பவம் மேற்படி விடுதியை அண்மித்ததாக, விமான நிலையத்தின் அபேய் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, காபூல் விமான நிலையத்தினை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய புலனாய்வு பிரிவினர் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வெடிப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்க தரப்பினர் ஆப்கானிஸ்தானை விட்டு எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் வெளியேறுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
இதற்கமைய, முதற்கட்ட அமெரிக்க தரப்பினர் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து கடந்த 15ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியிருந்தனர்.இதனால் பல்வேறு நாடுகள் தங்களது பிரஜைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன.
இவ்வாறானதொரு சூழலில் தலிபான்களின் ஆட்சியை விரும்பாத ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களும் அங்கிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்து வரும் நிலையில், காபுல் விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.இதனால் தொடர்ந்தும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய இராணுவத்தினர் காபூல் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், விமான நிலையத்தினை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக விமான நிலையத்திற்கு அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.