மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் சுற்றுலா பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டி மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியானது நேற்று கயானாவில் நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களை குவித்தது. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் பாபர் அஸாம் அரைசதம் கடந்து 51 ஓட்டங்களையும், விக்கெட் காப்பாளர் மொஹமட் றிஸ்வான் 46 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக
பெற்றனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் நிக்கொலஸ் பூரன் அதிரடியாக 33 பந்துகளில் 62 ஓட்டங்கள் குவித்தாலும் கூட அவர்களால் வெற்றிபெற முடியாமல் போனது.
இறுதி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்காக 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. எனினும் அந்த ஓவரில் 12 ஓட்டங்கள் மாத்திரம் பெறப்பட பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக 4 ஓவர்களில் வெறும் 6 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றிய பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் தெரிவானார்.