இதயநோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் இதேநாளை உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதய நோய் ஏற்படாமல் நலமுடன் வாழ மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இன்றைய சூழலில் இருதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.
நீரிழிவு, ரத்தஅழுத்தம் உள்ளவர்களின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது. ஒருகாலத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வயதுப் பாகுபாடு இன்றி 20 வயது இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை இருதய நோய்.
பெரும்பாலும் 2 அல்லது 3 மில்லிமீட்டர் அளவில் ரத்த குழாயில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுவது, ரத்தம் உறைவது, ரத்த குழாய் சுருங்குவது உள்ளிட்ட காரணத்தால் இதய நோய் ஏற்படுகிறது.
ரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் அனைவருக்கும் அறுவை சிகிச்சை கட்டாயம் அல்ல. ஆஞ்சியோ, ஸ்டென்ட் போன்ற சிகிச்சைகள் கூட தற்காலிக நிவாரணி தான். நேர்மறை எண்ணத்துடன் மனநிறைவுடன் இருக்கும் போதும், உணவு, உடற்பயிற்சியை முறையாக பின்பற்றும் போதும் எண்டோர்பின் என்ற ஆர்மோன் சுரக்கிறது இதனால் ரத்த குழாயில் பதிந்த கொழுப்பை கரைத்து, மேலும் கொழுப்பு படியாமல் தடுக்கிறது.
புகைபிடித்தல், மதுப்பழக்கம் உள்ளிட்டவைகளை தவிர்த்தால் இதய நோய் உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. முறையான உணவு முறை, உடற்பயிற்சி, நேர்மறையான மகிழ்ச்சியான வாழ்க்கை முறை மட்டுமே இதய நோய் பாதிக்காமலிருக்க நிரந்தரத் தீர்வு என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.