நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கொவிட் வைரஸின் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட நாடுகள் வரிசையில் இலங்கை 5 ஆவது நாடாக இடம்பிடித்துள்ளது.இது இலங்கைக்கு பாரிய வெற்றியாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான நாடுகளில் சிறிய வறிய நாடுகள் தவிர்ந்த அமெரிக்கா ஜப்பான் இத்தாலி மலேசியா போன்ற நாடுகள் முக்கியமானவையாகும்.இவற்றில் பெரும்பாலானவை G7 அமைப்பின் பிராந்தியத்திற்கு உட்பட்ட நாடுகளாவதுடன், இவற்றில் 4 நாடுகள் தடுப்பூசி மருந்துவகைளை தயாரிக்கும் நாடுகளாகும். தடுப்பூசி ஏற்றுவதில் இந்த அடைவை இந்த நாடுகள்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி இது தொடர்பில் காட்டிய ஆர்வமும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அர்ப்பணிப்புமே இந்த நாட்டில் இந்த அடைவைப் பெறுவதற்கு காரணமாக அமைந்து இருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.