கரிம உரத் திட்டத்தால் விவசாயி பாதிக்கப்பட்டால், அதற்காக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அறுவடை குறைந்து ஏதேனும் நட்டம் ஏற்பட்டால், இந்த ஆண்டின் இறுதியில் அது தொடர்பாக மதிப்பீட்டுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான ரமேஷ் பாத்திரண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், கரிம உரத் திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உரத்தின் தரக் குறைவு காரணமாக அதனை இறக்குமதி செய்வதை நிறுத்துவது தொடர்பாக, சீனத் தூதுவர் வெளியிட்ட அறிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, எந்த நாட்டிலிருந்தும் தரமற்ற உரங்களை இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. உயர்தரமான உரங்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.