தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினாவில், காந்தி சிலையின் கீழே திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் கதர் ஆடை அணிய வலியுறுத்தி காந்தியடிகள் தறி நெய்ததன் அடையாளமாக தறியால் நெய்யப்பட்ட கதர் நூல் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை சர்வோதயா சங்கம் சார்பில் காந்தியடிகள் குறித்து பாடப்பட்ட பாடல்களை, ஆளுநரும் முதலமைச்சரும் கேட்டு மகிழ்ந்தனர். பாடல்கள் பாடிய மூதாட்டி சுப்புலட்சுமி, 1961ஆம் ஆண்டு முதல் காந்தி ஜெயந்தியன்று பாடல் இசைத்து வருவதாக கூறிய நிலையில் அவருக்கு முதலமைச்சரும், ஆளுநரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.