உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையை செய்யத் தவறியமை குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று ( 22) கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணையை நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் முஹம்மத் இர்ஷதீன் ஆகிய நீதிபதிகள் முன்னெடுத்தனர்.
இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை பிரதிவாதி முன்னிலையில் வாசிக்கப்பட்டது.இதன்போது, குறித்த குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாக பூஜித் ஜயசுந்தர நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கின் ஆரம்ப சமர்ப்பணங்களை முன்வைக்க முறைப்பாடு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் திலீப பீரிஸ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சஹ்ரான் ஹாசீமின் தலைமைத்துவத்திலான தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பினால் நாட்டில் 08 இடங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றிருந்த போதும் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்டு அதனைத் தடுக்கும் கடமையை அலட்சியமாகப் புறக்கணித்ததன் மூலம் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 102ஆவது பிரிவின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறையான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,பிரதிவாதிக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களும், 1,215 சாட்சிகள் முன்னிலையாகியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலதிக விசாரணைக்காக வழக்கு நாளைய தினம் (23) வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.