ஒமிக்ரோன் என்று பெயரிடப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொவிட் வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொவிட் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கொவிட் பாதிப்பைக் கண்டறிதல், பொது சுகாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வது, கொவிட் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துவது உள்ளிட்டப் பணிகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும், விழாக்கள், கொண்டாட்டங்கள் அனைத்தும், கொவிட் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும், அதிகமானோர் ஓரிடத்தில் ஒன்று சேருவது, பெரிய அளவில் கூட்டங்கள் நடத்துவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.நாம் எந்த நிலையிலும் நமது பாதுகாப்பை இல்லாது செய்யக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென் – கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர்டொக்டர் பூணம் கேத்ராபால் சிங் தெரிவித்துள்ளார்.
புதிய வகை வைரஸ் என்றாலும் அவற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறை பழைய முறையாகவே உள்ளது. அதற்காக முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். கூட்டமான இடங்களைத் தவிர்த்துவிடுங்கள், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.