இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்தை களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், நாளை முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும், எதிர்வரும் காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாய நிலை காணப்படுவதாக அந்த தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுக்காமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேசத்தில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விநியோகத்தர்களின் பிரச்சினை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மேலும் 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார்.