ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 34 வது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று (04) மோதின. இப் போட்டி டுபாயில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 15 ஓவர்கள் முடிவில் 73 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் நயீம் 17, மஹ்முதுல்லாஹ் 16, சமீம் குசைன் 19 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.ஏனைய வீரர்கள் பெரிதளவில் பிரகாசிக்க தவறிவிட்டார்கள்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் , கெஸல்வூட் தலா 2 விக்கெட்டுகளையும் , மெக்ஸ்வெல் 1 விக்கெட்டையும் , அடம் ஸம்பா 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.
74 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 6.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் ஆரோன் பின்ச் 40 , டேவிட் வோர்னர் 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் இஸ்லாம் மற்றும் டஸ்கின் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் ஆட்டநாயகனாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அடம் ஸம்பா தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.