பாகிஸ்தான் சியால்கோட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கலகக் காரர்களால் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தை பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதிமொழி வழங்கியுள்ளார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தை கைவிடப் போவதில்லை என்றும், அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று (07) இடம்பெற்ற பிரியந்த குமாரவை பாதுகாப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்ட மாலிக் அத்னான் என்பவரை கெளரவிக்கும் நிகழ்விலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் வர்த்தக சமூகத்தினர் ஒரு இலட்சம் அமெரிக்கா டொலர்களை இழப்பீடாக வழங்குவதாகவும் ,ஒரு இலட்சம் அமெரிக்கா டொலர்களை திறட்டியிருப்பதாகவும் ,தனக்கு சியால்கோட் வர்த்தக சமூகத்தினர் அறிவித்துள்ளதாகவும் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற செயற்பாடுகள் இனி பாகிஸ்தானில் இடம்பெறாது என்று நம்புவதாகவும் ,நபி முஹம்மத் ஸல் அவர்களுடைய பெயரை பயன்படுத்தியும் , புனித இஸ்லாத்தின் பெயரை பயன்படுத்தியும் எவரும் வன்முறையில் ஈடுபடுவதற்கு இனிவரும் காலங்களில் அனுமதியளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ரஹ்மதுலில் ஆலமீன்” அகிலத்தாரிற்கு அருட்கொடை என்ற தலைப்பில் இம்ரான் கான் நபிகள் நாயகம் ஸல் அவர்களை புரிந்து கொள்வதற்கான ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.இதன் மூலம் நபி முஹம்மத் ஸல் அவர்களுடைய சிறப்பம்சங்களை கற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும், நபி ஸல் அவர்களுடைய உண்மையான அன்பை எத்திவைக்க பாகிஸ்தான் ஆலிம்களும், உலமாக்களும் முன் வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.