இலங்கையில் வஹாப் வாதம் ,சலபி கொள்கை மற்றும் ஜிஹாத் சிந்தனையை விதைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிசாரால் அறிவிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என பரவலாக அறியப்படும் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் 17 ஆம் திகதி மீள பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக சட்டத்தரணி சுமையா ஜிப்ரி ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனைகள் நேற்று (08) நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான நீதியரசர் யசந்த கோதாகொட மற்றும் நீதியரசர் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் பரீசிலனைக்கு வந்தது.இதன் போது சட்ட மா அதிபர் தரப்பின் நிலைப்பாட்டை முன்வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு இவ்வாறு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு பரீசிலனைக்கு வந்திருந்த சந்தர்ப்பங்களில் ,சி.ரி.ஐ.டி எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு கிடைக்கவில்லை எனும் காரணத்தின் அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.எனினும் நேற்றைய தினம் (08) இம் மனு பரிசீலனைக்கு வந்த போது மனுதாரர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சார்பில் சட்டத் தரணி சுமையா ஜிப்ரியின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணிகளான பாரிஸ் சாலி, எம்.சி.எம் முனீர், மொஹமட் ரிஸ்வான், சனோஸ் திஸாநாயக்க ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் சுஹைர் ஆஜரானார்.
பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே, நேற்று நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் அரச சட்டவாதி சஜின் பண்டார நீதிமன்றில் பிரசன்னமானார்.
இந் நிலையில் நீதிமன்றில் ஆஜரான அரச சட்டவாதி சஜின் பண்டார இந்த விவகாரத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் விசாரணைக் கோவை சட்ட மா அதிபருக்கு கிடைத்துள்ளதாகவும் அதனை ஆராய்ந்து வரும் நிலையில் , சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்க திகதியொன்றினை அளிக்குமாறும் கோரினார்.அதன்படி மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
(எம்.எப்.எம்.பஸீர்)
நன்றி விடிவெள்ளி
09.12.2021