இன்று (01) சர்வதேச எய்ட்ஸ் தினமாகும்.சமத்துவமின்மையை ஒழித்து எயிட்ஸ் நோயை இல்லாதொழிப்போம்- தொற்று நோய்களை வெல்வோம் என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.
எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் 1981 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் 1988 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் கீழுள்ள நாடுகளில் டிசம்பர் 1 ஆம் திகதி எய்ட்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றுவரை உலகளவில் 79.3 மில்லியன் மக்கள் எச்ஐவியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 36 மில்லியனுக்கும் அதிகமானோர் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர்.அண்மைய புள்ளிவிபரங்களின் படி 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எச்ஐவியுடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2020 ஆம் ஆண்டின் 1.5 மில்லியன் புதிய எச்ஐவி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
1987 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது.எனினும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலகில் எச்ஐவி பரவல் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகிறது.கடந்த ஆண்டில் 363 புதிய எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் காலத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் சார் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.