டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயிடன்டி கொக் உத்தியோகபூர்வ தெரிவித்து கிரிக்கெட் இரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்டில் தெ.ஆ. விக்கெட் காப்பாளர் டி கொக் இரு இன்னிங்ஸிலும் 34, 28 ஓட்டங்கள் எடுத்தார்.இந் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 29 வயதில் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குயிடன் டி கொக்கின் மனைவிக்கு விரைவில் முதல் குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் 2 வது மற்றும் 3 வது டெஸ்ட்டிலிருந்து டி கொக் ஏற்கெனவே விலகிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓய்வு அறிவிப்பு குறித்த அறிக்கையில் குயிடன்டி கூறியதாவது:
இந்த முடிவை நான் அவ்வளவு சுலபமாக எடுக்கவில்லை. வாழ்க்கையில் எது முக்கியம் என்கிற முடிவினால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். நானும் என் மனைவி சாஷாவும் எங்களுடைய முதல் குழந்தையை விரைவில் வரவேற்க எதிர்பார்த்திருக்கிறோம். எனக்கு என் குடும்பம் தான் எல்லாமுமாக உள்ளது. எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் விருப்பமானது. இப்போது அதனை விடவும் நான் விரும்பும் ஒன்று உள்ளது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் உங்களால் வாங்க முடியும், காலத்தைத் தவிர. எனக்கு முக்கியமானவர்களுக்காக என் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடுவது இத்துடன் முடியவில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பங்கேற்பேன். அனைவரையும் ஒருநாள், டி20 தொடர்களில் சந்திப்பேன் என்றார்.
2021 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க அணியின் தற்காலிக டெஸ்ட் தலைவராக டி கொக் இருந்தார். இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் டி கொக்கை முன்வைத்து பெரிய சர்ச்சை ஏற்பட்டது. கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டி கொக் விலகினார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். சில நாட்கள் மெளனத்துக்குப் பிறகு தனது விளக்கத்தை அவர் தெரிவித்து மீண்டும் ஆதரவாக மைதானத்தில் மண்டியிட்டார்.