கம்பஹா வலய தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்களின் அறிவு,திறன்,மனப்பாங்கு விருத்தியில் பாடசாலைகளுடன் இணைந்து செயற்படுவதற்காக 2019 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி மன்றம் – கம்பஹ என்ற அமைப்பின் ஐந்தாண்டுத் திட்டம்,வருடாந்த அமுலாக்கத் திட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தும் அங்குரார்ப்பண வைபவம் அண்மையில் திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கம்பஹா,களனி வலய தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.டீ.எம் தௌஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக fine Enterprises உரிமையாளர் அல்-ஹாஜ் இக்ராம் அவர்கள் கலந்துகொண்டதுடன் 500000 ரூபாவை இவ்வமைப்பிற்கு நன்கொடையாக வழங்கினார். மேலும் அவர் தனது உரையில் அவ்வமைப்பின் எதிர்காலத்திட்டத்தினை பாராட்டி அதன் செயற்பாடுகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ஆண்டுதோறும் தனது நிறுவனத்தின் மூலம் நிதியுதவியளிப்பதாக உறுதியளித்தார்.
கல்வி அபிவிருத்தி மன்றத்தின் திட்ட முன் வைப்பு நிகழ்வில் கம்பஹா கல்வி வலயத்தின் அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.