சிறு பத்திரிகைகளையும், புத்தகங்களையும் அச்சு வடிவில் கொண்டு வருவதில் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் தெஹிவளை ஏ.ஜே.பிரின்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் உரிமையாளரான அதாப் மர்ஸுக் மறைந்தார்.
இவருடைய மறைவு குறித்து ‘மீள்பார்வை’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான சிராஜ் மஷ்ஹுர் எழுதியுள்ள ஆக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
’44, ஸ்டேஷன் வீதி, தெஹிவளை என்ற முகவரியையும், மேலே உள்ள இந்தக் கட்டிடத்தையும் மறக்கவே முடியாது.
ஸ்டேசன் வீதியில் இதற்கு முன்பு அவர்கள் இருந்த இடங்களும், 25 வருடங்களுக்கு முன்பிருந்த ‘Apple Computer’களும் நினைவுக்கு வருகின்றன.
ஏ.ஜே என்றால் மர்ஸூக், இஸ்ஸடீன் ஆகிய இருவரது முகங்களும்தான் கண் முன்னே தோன்றும். இஸ்ஸடீன் கறாரானவர்,கண்டிப்பானவர். மர்ஸூக் மென்மையானவர், இளகிய மனம் படைத்தவர்.
இவர்கள் இருவரும் அச்சுப் பணிகளில் பலருக்கும் கைகொடுத்தவர்கள். பல வெளியீடுகளை சாத்தியப்படுத்தியவர்கள்.
கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பலரும் அவர்களை ஏமாற்றிய கதைகளையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லா சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் அச்சுத் துறையில் நிலைத்திருக்கின்றனர்.
ஏ.ஜே. மூலம் அதிக நன்மையடைந்தோர்களுள் நாங்களும் அடங்குவோம். ‘மீள்பார்வை’ பத்திரிகை உட்பட பல புத்தகங்களை அச்சிட்டுள்ளோம்.
குறைந்த விலையில் அச்சாக்க வேலைகளை செய்து தந்ததையும், கடன் வசதி மற்றும் மீளச் செலுத்தும் கால அவகாசம் போன்ற அவர்களது உதவிகளையும் ஒருபோதும் மறக்க முடியாது.
சகோதரர் மர்ஸூக் அமைதியான சுபாவம் கொண்டவர். புன்னகை நிறைந்த முகத்துக்கு சொந்தக்காரர்.
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, உயர்ந்த சுவனத்தை அருள்வானாக.