எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அரசாங்கம் இதுவரையில் அந்த கோரிக்கைக்கும் பதிலளிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ‘மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலையை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு பொறிமுறையை அமைச்சகத்திற்கு நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.
மற்ற நாடுகளில், எரிபொருள் விலை நிர்ணயம் வாரந்தோறும் அல்லது தினசரி மதிப்பாய்வு செய்யப்படுகிறது,’ சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கச்சா இறக்குமதிக்கான ஆறு மாத கால ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலையானது, தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையின் வாங்கும் சக்தியை சிக்கலாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்கா ஐஓசி கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோலின் (ஒக்டேன் 95) எரிபொருள் விலையை 3 ரூபாவாலும், பெற்றோல் (ஒக்டேன் 92) லிட்டருக்கு 7 ரூபாவாலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.