பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் முறையிடும் வகையில் ‘அனைவருக்கும் நீதி’ எனும் அமைப்பினால் நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி காலை 11 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையொப்பமிடும் பிரசாரம் முன்னெடுக்கப்படும் என அந்த அமைப்பின் அழைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்.
‘இந்தச் சட்டம் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க சட்டம் இயற்றப்படும் என்று கடந்த காலங்களில் அரசாங்கம் பல உறுதிமொழிகளை அளித்துள்ளது.
எவ்வாறாயினும், அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச் சட்டமூலமானது அத்தகைய உத்தரவாதங்களுக்குப் பற்றாக்குறையாக உள்ளது.
அத்தோடு பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள எந்தவொரு கடுமையான விதிகளையும் நிவர்த்தி செய்யத் தவறியுள்ளது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1979 பயங்கரவாத தடைச்சட்டம் ஆறு மாதங்களுக்கு தற்காலிக விதிகள் சட்டமாக கொண்டு வரப்பட்டது, இன்னும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் உள்ளது என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘இந்த காலகட்டத்தில், அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை நசுக்குவதற்கு இது பயன்படுத்தப்படுவதை நாங்கள் கண்டோம், அது கடந்த காலத்தில் தொடர்ந்து செய்யப்பட்டது மற்றும் இன்றும் தொடர்கிறது,’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.