பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் ஆகியோருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ தொழிற்சாலையை இன்று (25) காலை பார்வையிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பால் பண்ணையாளர்களுக்கு வலுவூட்டல் மற்றும் திரவ பால் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்ததாக மேலும் கூறினார்.
உள்ளூர் பால் பண்ணையாளர்களிடம் இருந்து ஒரு லீற்றர் பாலை 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
மில்கோ தொழிற்சாலை வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, திரவப் பால் சேகரிப்பு மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.
குறித்த விலையில் உள்ளுர் பால் பண்ணையாளர்களிடமிருந்து பால் கொள்வனவு நாளை (26) முதல் அமுலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்தார்.