நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் வழங்கப்படும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் கையிருப்பு குறைந்தளவே காணப்படுகிறது. அத்துடன் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலும் டீசலின் கையிருப்பு குறைவடைந்து வருகிறது.
இதன் காரணமாக குறித்த மின் உற்பத்தி நிலையத்தினூடாக 149 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றது.
இதேவேளை அரச அலுவலகங்களில் ஏ.சிஃ மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சினால் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கையுடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள சந்தர்ப்பங்களில் A/C பாவனையை தவிர்த்து மின்விசிறிகளை உபயோகிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அனைத்து மின்விளக்கு, மின்சாதனங்களை அணைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
காலை வேளையில் வெளிபுறச் சூழல் வெப்பநிலை குறைவு என்பதால் ஜன்னல்களை திறந்துவைத்து, வெளிபுற காற்றோட்டத்திலிருந்து பயன்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வளிசீராக்கியை (A/C) செயற்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.