இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி ஐந்து இலங்கை மீனவர்ளையும் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படையினர் தடுத்து வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்ற ரோந்து கப்பல் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
இதன்போது, கன்னியாகுமரியில் இருந்து வடக்கு பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் சந்தேகமான வகையில் ஒரு மீன்பிடி படகு மீன் பிடித்துக் கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர்.
உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை பிடித்ததுடன் அந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பதும், அதில் இலங்கை புத்தளம் மாவட்டம் சில்லா மற்றும் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையை சேர்ந்த 5 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த படகுடன் 5 பேரையும் கடலோர காவல் படையினர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
குறித்த நபர்களான ஜே.பி.எஸ். பிகரு மற்றும் டி.ஜி.எஸ். பெர்னாண்டோ, நீர்கொழும்பைச் சேர்ந்த இருவரும், டபிள்யூ.என்.கே. பெர்னாண்டோ, டபிள்யூ.எம்.ஏ.ஏ. பெர்னாண்டோ மற்றும் வி.எம்.ஆர்.ஐ. அந்தாதி, அனைவரும் சிலாபத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர்களிடம் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.