ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளின் விளைவே என முதலில் கருதப்பட்ட போதிலும், அதற்குப் பின்னரான விசாரணைகளில் ‘மிகப்பெரிய அரசியல் சதி’ எனத் தெரியவந்ததாக கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் இன்று உரையாற்றும் போதே பேராயர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது என்றும், உண்மையை வெளிக்கொணருவதற்கும், பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடருவதற்குப் பதிலாக, ‘நீதிக்காகக் கூக்குரலிடுபவர்களை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும்’ முயற்சிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர வழிவகைகள் வகுக்கப்படுவதை உறுதிப்படுத்தவும், ‘தொடர்ச்சியான ஆதாரங்களை சேகரிப்பதற்கு’ ஆதரவளிக்குமாறு மனித உரிமைகள் பேரவை மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பேராயர் மேலும் அழைப்பு விடுத்தார்.
மேலும் இந்த தற்கொலை குண்டு தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போதும் இந்த படுகொலையில் பெரும் அரசியல் சதித்திட்டம் இருப்பது அடுத்தடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் பலமுறை தாம் கோரிக்கை விடுத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு தற்போதைய இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என பேராயர் கூறினார்.
அத்தோடு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணருவதற்கும் பொறுப்பு கூறவேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு பதிலாக, நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை அடக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஆகவே சாட்சிய சேகரிப்பு நடவடிக்கையோடு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிய பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என பேரவையையும் அதன் உறுப்பு நாடுகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.