ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு கடந்த 28ம் திகதி நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
உடனடியாக ரஷ்யப் படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிலையில் உடன்பாடு இல்லாததால் தற்போது தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.
எவ்வாறிருப்பினும், கீவ் இல் உள்ள தொழில்நுட்ப மையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் ஆகவே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறும், ரஷ்யா தெரிவித்திருந்தது.
இதனையடுத்து தலைநகரில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் ஒன்றின் மீது, ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜெலென்ஸ்கி, தனது நிலத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடும் உக்ரைனை எந்த அமைப்பும் உடைக்கப் போவதில்லை என்று கூறினார்.
போர் நிறுத்தம் தொடர்பான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், உக்ரைன் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்துவதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.