தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு சாத்தியமான வழிகளில் பங்களிக்குமாறு இலங்கைப் பிரஜைகளிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கமைய அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் தேவையற்ற மின் சாதனங்கள் மற்றும் விளக்குகளின் பயன்பாட்டை மட்டுப்படுத்துமாறு ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘கச்சா எண்ணெயின் அசாதாரண விலையேற்றம் பொருளாதாரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த பொது மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சூரிய ஒளியில் இயங்காத வீதி விளக்குகளையும் அணைக்கலாம். நெருக்கடியைத் தடுக்க மக்களும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும், ‘என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, நாட்டில் மழையின்மை மற்றும் வறண்ட காலநிலை காரணமாக, நீர் மின் நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார நுகர்வைக் குறைக்க நாட்டு மக்களால் ஏதேனும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால், அதன் மூலம் தற்போதைய மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியைத் தீர்க்க அவர்கள் பங்களிப்பார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் கூறினார்.