மாணவர்களின் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும், ஆசிரியர்களை அருகில் உள்ள பாடசாலைக்கு பணியமர்த்துமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
அதிகரித்து வரும் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் ஏனைய இடையூறுகளைக் கருத்தில் கொண்டு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் தமக்கு நியமனம் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமைய எதிர்காலத்தில் திட்டவட்டமான திட்டத்தை சமர்பிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘நாட்டில் சுமார் 10,155 பாடசாலைகள் இயங்குகின்றன. நாட்டில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பாடசாலைகளும் உள்ளன. 51வீத பாடசாலைகள் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பள்ளிகள் உள்ளன.
78வீத பாடசாலைகளில் 500இற்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். 92வீத பாடசாலைகளில் 1,000க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். 1,462 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.
மேலும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3000 பாடசாலைகள் உள்ளன. எனவே, பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளுடனான பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.
அதன்பின்னர் போக்குவரத்து பிரச்சினைகளை ஆசிரியர்களுடன் ஆராயலாம் என பேராசிரியர் பெரேரா தெரிவித்தார்.