கொழும்பிலுள்ள வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் சில தடுப்புகளில் கூரிய ஆயுதங்களை பொருத்தி கருப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகளை கண்டித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
இதன்போது, இன்று காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அருகாமையில் பொலிஸ் அதிகாரிகள் அதிகளவில் பிரசன்னமாகியிருப்பதாலும், காலி முகத்திடலுக்குச் செல்லும் சில வீதிகள் பாதசாரிகள் கூட செல்லக்கூடிய வகையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாலும் நிலைமை அதிகரித்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சில தடுப்பு வேலிகளில் கூர்முனைகள் பொருத்தப்பட்டுள்ளன, மற்றும் கருப்பு பொருட்களால் மூடப்பட்டிருக்கும் இந்த தடுப்புகள் நபர்களுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
அரசாங்கம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதப்படையினரும் எல்லாச் சூழலிலும் மிகுந்த நிதானத்துடன் செயற்படுமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கின்றோம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அமைதியான முறையில் கருத்து வேறுபாடு தெரிவிப்பதற்கான மக்களின் உரிமையையும், குடிமக்களின் நடமாடும் சுதந்திரத்தையும் உறுதி செய்வது படைகளின் கடமை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
‘எந்தப் பகுதியிலிருந்தும் எந்த வன்முறையும் நாட்டிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்,’ எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.