30 மில்லியன் ரூபாவை முறைகேடான வகையில் பயன்படுத்தி பங்குகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மேலதிக விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.
கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஊடாக 30 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 241ஆவது பிரிவின்படி, இந்த வழக்கில் இரண்டாவது மற்றும் ஆறாவது குற்றவாளிகள் ஆஜராகாத நிலையில், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு நபர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தின் போது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
நாமல் ராஜபக்ஷ, இந்திக கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, நித்ய சேனானி சமரநாயக்க மற்றும் கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 பிரிவுகளின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் தொடர்பாளர் வசந்த சமரசிங்கவின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை வழக்கின் சாட்சியங்கள் மீதான மேலதிக விசாரணை செப்டம்பர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், சாட்சிகள் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மனு அனுப்பப்பட்டது