இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நாளாந்தம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் ஆயிரத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் டொலர் கையிருப்பு குறைந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்துவிட்டதால், இலங்கையில் போராட்டங்கள் நடக்கின்றன.
ஆனால் போராட்டங்கள் காரணமாகவே டொலர் மேலும் குறையக்கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்திருப்பதே இதற்குக் காரணம்.
அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவருவதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இலங்கையின் சுற்றுலாத்துறை.
அதேநேரம், ‘இலங்கையில் சுமார் 5 லட்சம் பேர் சுற்றுலாத் துறையில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நிலைமையினைசீராக்குவதற்கு அனைவரும் ஒன்றுபடவேண்டும். அதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கான தேவையான வசதிகள் மற்றும் அவர்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.