வைத்திய நிபுணர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜயலத் ஜயவர்தனவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
மனித உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் துணிந்து போராடியவர். தமிழ் பேசும் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தவர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, சர்வதேசத்தைக் கூட நாடியவர்.
தமிழ் பேசும் மக்களுக்காக நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் இவரின் குரல் ஓங்கி ஒலித்ததால் சில அடிப்படைவாதிகளால் ‘சிங்கள புலி’ என்று கூட விமர்சிக்கப்பட்டார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெறும்போது, 2013 இல் இதே போன்றதொரு நாளில் காலமானார்.
ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து குரல் கொடுத்து வந்தவர்.
இவர் 7ஆவது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
அமரர். ஜயலத் ஜயவர்தனவின் மகன்தான் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான காவிந்த ஜயவர்தன. தந்தையின் மறைவின் பின்னர் 2015 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
(மூலம்: முகப்புத்தகம்)