சிறிய பிரச்சினைக்கும் மனிதர்களை மனிதர்களே அடித்துக் கொலை செய்கின்ற அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்ற ஒரு மனப்பாங்கு கொண்டவர்களாகத் தான் நாங்கள் இன்னமும் இருக்கின்றோம் என களனி மற்றும் கம்பஹா வலயங்களுக்கான தமிழ் மொழிப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம். தௌஸீர் நளீமி தெரிவித்தார்.
கம்பஹா, கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய பழைய மாணவியர் சங்கத்தின் கல்வி முன்னேற்றத்துக்கான SKY Zone (SHINING KNOWLEDGE YOUNGERST’S ZONE) பிரிவின் தரம் 6,7,8,9 என்பவற்றுக்கான இலவச பாட போதனைகளை ஆரம்பித்து வைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, எமது நாட்டில் 98 சதவீதமானவர்கள் எழுத, வாசிக்கத் தெரிந்த கல்வியறிவுள்ளவர்களாக இருந்தும் பெரும்பாலானோர் கல்வியினூடாக எதிர்பார்க்கப்படும் மனப்பாங்கு மாற்றத்தை அடைந்து கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர்.
அதற்கு நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
நாட்டில் நடைபெற்ற 9 ஆம் திகதி நிகழ்வில் 9 பேர் மரண மடைந்தார்கள். அதில் மூன்று பேர் இந்த கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் மரணித்துப் போனார்கள்.
இந்த நிகழ்வுகள் எங்களிடம் கல்வியின் பிரதான அடைவான மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்றட வில்லையென்பதையே எடுத்துக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிலையை கல்வியினூடாக மனப்பாங்கு மாற்றத்தை உருவாக்குவதனூடாகவே மாற்ற முடியும். நாங்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் எங்களுக்கு சிறந்த சமய வழிகாட்டல்கள் இருக்கின்றன.
அவற்றை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். அடுத்தவர்களுடைய மனதைப் புன்படுத்தாமல், அடுத்தவர்களின் முகங்களைப் பார்த்துப் புன்னகைக்கின்றவர்களாக நாங்கள் மாற வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு அதிபர் எம்.எம்.எம். சர்ஜூன் தலைமையில் நடைபெற்றதுடன் கல்லூரியின் பிரதி அதிபர் எம்.ஆர்.எப். பஹ்மிதா, கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழைய மாணவிகள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
(தகவல் – எம்.எம். முஹிடீன்)