தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சரியான தீர்மானங்களை எடுத்தால் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (1) தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பழைய அரசியலில் இருந்து விடுபட்டு புதிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
தேசிய ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் மாத்திரமன்றி அனைவரினதும் எதிர்காலம் இன்று தொலைந்து போயுள்ளதாகவும், தற்போது இலங்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எங்கும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும், இன்று ‘கோட்டா வீட்டுக்குப் போ, ராஜபக்சக்கள் வீட்டுக்குப் போ’ என்ற இரண்டு கோசங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவிற்கும் தோழர்களுக்குமிடையில் மோதல்கள் ஏற்பட்டடுள்ளது.
மேலும், 2019 ஜனாதிபதித் தேர்தலிலும், 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் வழங்கப்பட்ட ஆணையும் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை உலக வங்கி 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் மற்றும் இலங்கையையும் பாதிக்கும் உலகளாவிய உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளதாகவும், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை மீள ஏற்படுத்துவதே நாட்டின் முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.