தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள விபரத்தை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.
மேலும், 15-4-2022 அன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தான் எழுதிய கடிதத்திலும், அவருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருட்களையும், உதவிகளையும் வழங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைக் கோரியிருந்ததாகவும், ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்கிடுமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்மட்ட ஆணையத்தின் மூலம் இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். நமது அரசு அளிக்கும் நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசு தயாராக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.