பஸ் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,
பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்று (30) பல ரயில்களில் இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்த காமினி செனவிரத்ன, மேலும் பல ரயில்களுக்கு நாளையதினம் இரண்டு கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அதிகரிப்பு மற்றும் தொலைதூரப் பகுதிகளிலுள்ள புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டுகள் தீர்ந்து போவதனால் புகையிரத நிலைய அதிபர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், இன்று காலை பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட ‘ரஜரட்ட ரஜின’ புகையிரதம் பெலியத்த புகையிரத நிலையத்தில் நிரம்பியிருந்ததால் மாத்தறை புகையிரத நிலையத்தில் பல பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.