நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
அதற்கமைய குறித்த நிறுவனங்களுடனான கலந்துரையாடலில் மருந்து, உணவு மற்றும் உரம் வழங்கல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இரு சர்வதேச நிதி நிறுவனங்களின் சந்திப்பை ஒட்டி சர்வதேச மாநாடு ஒன்றை அமைப்பது தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்கள் சாதகமாக அமைந்திருப்பதாக விளக்கமளித்த பிரதமர், எதிர்வரும் வாரத்திற்கான எரிபொருள் தேவைக்கு செலுத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் உடனடி சவாலாகும் என்றும் கூறினார்.
வங்கிகளில் டொலர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தேவையான நிதியை திரட்ட அரசு தற்போது வேறு வழிகளை பார்க்கிறது.
இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் எனவும், பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சந்திப்புகளின் பின்னர், நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பில் இன்று முழுமையான அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.