இலங்கையின் வெளிநாட்டு பணப்புழக்கம் தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டில் முற்றாக இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றது.
தற்போது பற்றாக்குறையாக உள்ள இந்த அத்தியாவசியப் பொருள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும் தற்போதைய வரவு செலவுத் திட்டம் இனி யதார்த்தமானது அல்ல எனவும், எனவே வருமான வரியை அதிகரிக்கும் புதிய வரவு செலவுத் திட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
‘சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் சமுதாயம் சரிந்துவிடும். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வரி வருவாய் சுமார் 15 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும்’ என்று அலி சப்ரி தெரிவித்துள்ளார்.