2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை முறையாக சேமித்து வைக்காத காரணத்தினால் அதன் தரம் இழந்துள்ளதாக கோபா குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 99 வீதமானவை நோயாளிகளுக்கு குறித்த மருந்துகளை வழங்கப்பட்டுள்ளதாக கோபா குழுவின் கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.
எனவே, நடைமுறைப்படுத்தப்படவுள்ள மருந்துகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மருந்துகளை சேமிப்பதற்கான வசதிகளை துரிதப்படுத்துமாறு சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சுக்கு பொதுக் கணக்குக் குழு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ வழங்கல் பிரிவுக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் வெப்பநிலை சரியாக பராமரிக்கப்படாததையும், மத்திய மருந்து கிடங்குகள் மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவ பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதையும் குழு அவதானித்துள்ளது.
இதேவேளை, மருந்துகள் பழுதடைந்ததைக் கண்டறியும் முறைமை இருந்தால், விநியோகஸ்தர்களின் உத்தரவாதத்தில் இருந்து நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், 60 மருந்துகளின் தரப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மூலம் இந்நிலைமையை ஓரளவு தவிர்க்க முடியும்.
அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து மருந்துப் பொருட்கள் அல்லது மருத்துவப் பொருட்களை மீளப்பெறுவதற்குப் பதிலாக உரிய விநியோகஸ்தர்களிடம் இருந்து பெறுவதற்கு மருத்துவ வழங்கல் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவினால் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோபா குழுவின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் முதலாவது அறிக்கையிலேயே இந்த உண்மைகள் இடம்பெற்றுள்ளன.