எரிபொருளைக் கோரி இன்று மேலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நுகேகொடை தெல்கந்தவில் இருந்து ஹைலெவல் வீதி தடை செய்யப்பட்டுள்ளதுடன், யூனியன் பிளேஸில் இருந்து செல்லும் பாதை ஆர்ப்பாட்டக்காரர்களால் தடைப்பட்டுள்ளது.
இதனிடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று இரவு பாணந்துறை, வெகடவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 53 வயதுடைய நபர் ஒருவர் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று காலை முதல் தனது முச்சக்கர வண்டியில் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், அவரது மகன் அதே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிள் வரிசையில் இருந்த போது இந்த துக்க சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், இறந்தவருடன் வரிசையில் நின்ற எல். அத்துலசிறி சில்வா தெரிவிக்கையில்,
‘மொரட்டுவை எகொட உயன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாங்கள் வரிசையில் நின்றிருந்தோம், அதில் எரிபொருள் இல்லாததால் இரவு 7 மணியளவில் வெக்கடை பெற்றோல் வரிசையில் வந்தோம்.
அவர் முன்பக்கத்திலும், நான் பின் இருக்கையிலும் இருந்தோம். அதிகாலை 1 மணியளவில் அவர் பெருமூச்சு விட்டார்.
1990க்கு அழைப்பு எடுத்தோம். இதனால் அவர் பாணந்துறை வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று அறிந்தேன் என குறிப்பிட்டார்.
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி மோசமடைந்து பல துறைகளும் பாதித்து பொதுமக்களை கடுமையாக அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகிறது.
இதேவேளை பேருந்து சங்கங்கள் பொது போக்குவரத்தை பாதிக்கும் வகையில் சாலையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளன.
அதே நேரத்தில் என்ஜின் எண்ணெய் பற்றாக்குறை ரயில் சேவைகளின் எதிர்கால செயல்பாடுகளை அச்சுறுத்துகிறது.
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் நீண்ட நாட்களாக வரிசையில் நிற்கும் நிலையில், எரிபொருள் பற்றாக்குறையால் கடலுக்குச் செல்ல முடியாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.