இந்தியா மற்றும் பங்களாதேஷில் கடுமையான பருவமழையால் மின்னல் தாக்குதல்கள் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 59 பேர் வரை இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன.
கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக, சில்ஹெட் மற்றும் சுனம்கஞ்ச் ஆகிய இரு மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இரு மாவட்டங்களிலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வீடுகளை இழந்த மக்கள் பள்ளிக்கூடங்களில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வீதிகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழைக்கு இதுவரை சிறுவர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை அடுத்த சில நாட்களுக்கு வெள்ளம் மேலும் மோசமாகும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பங்காளதேஷ அரசு அதிகாரிகள் சமீபத்திய வெள்ளத்தை 2004க்குப் பிறகு நாட்டின் மிக மோசமான வெள்ளம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘வெள்ளிக்கிழமை அதிகாலையில் முழு கிராமமும் தண்ணீருக்குள் சென்றது, நாங்கள் அனைவரும் சிக்கித் தவித்தோம்’ என்று பங்காளதேசத்தில் உள்ள கம்பனி கஞ்ச் கிராமத்தில் வசிக்கும் லோக்மன், என்பவர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பங்களாதேஷின் சில்ஹெட் பகுதி மே மாதத்தின் பிற்பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்த வார மழை வந்துள்ளது, அப்போது குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர்.